கி.பி. 15-ஆம் நூற்றாண்டின் கொற்றவை கற்சிலை கண்டெடுப்பு
திருப்பத்தூர் அருகே உள்ள ஜவ்வாதுமலையில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே உள்ள ஜவ்வாதுமலையில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, மதுரை தியாகராசர் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் ரே.கோவிந்தராஜ், காணிநிலம் முனிசாமி, வேந்தன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் ஜவ்வாது மலையில் கொற்றவை கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியதாவது:
வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஜவ்வாது மலையில் 32 மலை கிராமங்கள் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகும். இதில், புதூர்நாட்டிலிருந்து புலியூர் வழியாக நெல்லி வாசல் நாட்டிற்குச் செல்லும் பிரதான காட்டுச் சாலையில் 3.5 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்ட கொற்றவை தெய்வம் வடிவமைக்கப்பட்ட கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இத்தெய்வத்தை இவ்வூர் மக்கள் பட்டி மிதி மாரியம்மன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர். இந்த கற்சிலை 4 கைகளுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேல் இடது, வலது கைகளில் சங்கு, சக்கரம் காணப்படுகின்றன. கீழ் வலது கையில் சூலாயுதம் உள்ளது. வாய்ப்பகுதியில் பெரிய 2 கோரைப் பற்கள் உள்ளன. தலையில் கிரீடம், காதுகளில் குண்டலங்கள் காணப்படுகின்றன. பார்வதியின் அவதாரமான இப்பெண் தெய்வத்தின் கைகளில் உள்ள சங்கு, சக்கரம் அதன் அண்ணனான விஷ்ணுவின் கைகளில் உள்ளதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இத்தெய்வம் எருமை தலையின் மேல் நிற்பது போல் காணப்படுகிறது.
இந்தக் கற்சிலை அமைப்பைப் பார்க்கும்போது கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை எனத் தெரிகிறது. மேலும், பழந்தமிழரின் தெய்வ வழிபாட்டில் கொற்றவை என்னும் பெண் தெய்வ வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது. தொல்காப்பியர் காலத்தில் இருந்து கொற்றவை என்னும் பெண் தெய்வம் போரோடு தொடர்புடையதாக சித்தரிக்கப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் கானமர் செல்வி, காடு கிழாள், பழையோள் ஆகிய பெயர்களில் கொற்றவை என்னும் பெண் தெய்வம் அழைக்கப்பட்டது. இத்தெய்வம் முருகனை ஈன்றெடுத்த தாய் என்பதை திருமுருகாற்றுப்படையும் கூறுகிறது. இன்றைக்கும் இம்மலைவாழ் மக்கள் தனியாகச் செல்லும்போது இத்தெய்வத்தை வழிபட்டுச் சென்றால் இத்தெய்வம் தங்களைப் பாதுகாக்கும் என்று மலைவாழ் மக்கள் நம்புகின்றனர். சங்க காலம் தொட்டு வழக்கில் உள்ள கொற்றவை வழிபாட்டை இம்மலை மக்கள் போற்றி வருவது சிறப்புக்குரியது என்றார் அவர்.