முகப்பு
வேலூர்

ஜோலார்பேட்டை ரயில்வே மேம்பாலப் பணிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கே.சி. வீரமணி தகவல்

ஜோலார்பேட்டையில் புதிதாக கட்டப்படும் ரயில்வே மேம்பாலப் பணிக்கு கூடுதலாக ரூ. 10 கோடியே 70 லட்சம்

Updated On : 22 அக்டோபர், 2018 at 6:02 AM
பகிர்:

ஜோலார்பேட்டையில் புதிதாக கட்டப்படும் ரயில்வே மேம்பாலப் பணிக்கு கூடுதலாக ரூ. 10 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
ஜோலார்பேட்டை நகரின் மையப் பகுதியில் ரயில் நிலையம் இயங்கி வருவதால் கிழக்கு, மேற்கு என 2 பகுதிகளாக ஜோலார்பேட்டை நகரம் பிரிந்துள்ளது. இதனால், கிழக்கிலிருந்து மேற்கு பகுதிக்கு வாகனங்களில் செல்ல 3 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு கடந்த ஓராண்டுக்கு முன் ரூ. 11 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. அதன் பின் மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், போதிய நிதி இல்லாததால் இப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கடந்த ஆண்டு தினமணியில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. மேலும், பணி விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான கே.சி.வீரமணியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதன்பேரில், மேம்பாலப் பணிக்கு கூடுதல் நிதியாக ரூ. 10 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யக் கோரி தமிழக முதல்வரிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையேற்று, முதல் தவணையாக ரூ. 5 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான காசோலையை தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே. மிஸ்ராவிடம் அமைச்சர் கே.சி.வீரமணி சனிக்கிழமை வழங்கினார்.
இதுகுறித்து அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:
ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே மேம்பாலம் அமைக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தேன். அப்போது, ரூ. 11 கோடி நிதியை அவர் ஒதுக்கினார்.
இதையடுத்து மீண்டும் நிதி கேட்டு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தேன். இதையடுத்து முதல்வர் முதல் தவணையாக வழங்கிய ரூ. 5 கோடியே 70 லட்சத்துக்கான காசோலையை ரயில்வே நிர்வாகத்திடம் வழங்கினேன். ரயில்வே மேம்பாலப் பணிகள் அடுத்த வாரத்தில் தொடங்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.