ஏலகிரியில் கற்திட்டை வடிவிலான நடுகற்கள் கண்டெடுப்பு
வேலூர் மாவட்டம், ஏலகிரி மலையில் கற்திட்டை வடிவிலான நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டம், ஏலகிரி மலையில் கற்திட்டை வடிவிலான நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின், தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, ஆய்வு மாணவர் ரா.நீலமேகம் ஆகியோர் ஏலகிரி, கொட்டையூர் பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வில் சோழர் காலத்தைச் சேர்ந்த கி.பி. 10-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் இரண்டினைக் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து க.மோகன்காந்தி கூறுகையில், ஏலகிரியிலுள்ள
12 கிராமங்களில் கொட்டையூர் கிராமமும் ஒன்று. இந்த ஊரில் பழைமையான வரலாற்றைத் தாங்கி நிற்கும் இரண்டு நடுகற்கள் தனியார் விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2.5 அடி உயரத்தில் முதல் நடுகல் கற்திட்டை வடிவில் காணப்படுகிறது. அதாவது மூன்று பக்கங்களிலும் பலகைக் கல்லை வைத்து, மேலே ஒரு பெரிய பலகைக் கல்லைப் போர்த்திய நிலையில் காணப்படுகிறது. இந்த நடுகல் சிதைந்த நிலையில் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள நடுகல் ஏலகிரியில் நடைபெற்ற பெரிய போரில் வீரன் உயிர் விட்டிருக்க வேண்டும். இவ்வீரனின் வலது கையில் குறுவாள் ஒன்று உள்ளது.
இடது கையில் கத்தி போன்ற நீண்ட ஆயுதம் ஒன்றுள்ளது. இடது பக்கக் கொண்டையிட்டு, காதுகளில் குண்டலங்களுடன் இந்நடுகல் காணப்படுகிறது. இந்த நடுகல் வீரனுக்கு அருகில் ஒரு பெண் உருவம் காணலாகிறது. இப்பெண் உருவம் நாட்டுக்காக உயிர்விட்ட வீரனின் மனைவியாகும். இப்பெண் தன் கணவன் இறந்தவுடன் தானும் உடன்கட்டை ஏறி உயிர் விட்டிருக்கிறார். இப்பெண்ணின் வலது கையில் கற்குடம் ஒன்று காணப்படுகிறது. இடது கை வயிற்றின் மேல் வைத்த நிலையில் உள்ளது.
இரண்டாவது நடுகல் 4 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்டு, புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்நடுகல் இடது பக்கக் கொண்டையுடன் காதுகளில் குண்டலங்களுடன் காட்சி தருகிறது. வலது கையில் கத்தி ஒன்றை ஏந்திய நிலையில் உள்ளது. இந்த நடுகற்கள் ஏலகிரியில் வரலாற்றுக் காலம் தொட்டு மக்கள் வாழ்ந்து வருவதையும், வரலாற்றை இம்மக்கள் நடுகற்கள் மூலம் பதிவு செய்துள்ளதையும், பதிவு செய்துள்ள வரலாற்றை தற்காலம் வரை பாதுகாத்து வருவதையும் அறிய முடிகிறது. மேலும், இவ்விரு நடுகற்களும் அழிவின் விளிம்பில் உள்ளதால் இவற்றைத் தொல்பொருள் துறை பாதுகாக்க வேண்டும் என்றார்.