கழிவுகள் கலந்து துர்நாற்றத்துடன் குடிநீர் விநியோகம்: ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்
கழிவுகள் கலந்து துர்நாற்றத்துடன் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சேனூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
கழிவுகள் கலந்து துர்நாற்றத்துடன் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சேனூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
காட்பாடி அருகே சேனூர் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப் பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குழாய்கள் அமைத்து, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை குழாயில் வந்த குடிநீரில் கழிவுகள் கலந்து வந்ததுடன், கடும் துர்நாற்றமும் வீசியதாகத் தெரிகிறது. மேலும், அந்த தண்ணீரில் குப்பைகளும் கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் இதுதொடர்பாக மனு அளித்தனர்.
கழிவுகள் கலந்த குடிநீரால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை உடனடியாக சரிசெய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள் அளித்த மனுவில், வேலூர் மாவட்டம் முழுவதும் 14 ஒன்றியங்களில் தலா 30-க்கும் மேற்பட்டோர் டெங்கு ஒழிப்பு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்தத் தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ரூ. 235 வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தினக்கூலி ரூ. 300-க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால், வேலூர் மாவட்டத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும் தினக்கூலி உயர்த்தப்படவில்லை. உடனடியாக கூலி உயர்வை அறிவிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல், இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 400 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.