வேலூர் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்வோரிடம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதபட்சத்தில் 11 வகையான மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலூர் மக்களவைத் தேர்தல் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வாக்காளர்கள் புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 வகையான மாற்று ஆவணங்களான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணிக்காக வழங்கப்பட்டுள்ள புகைப்பட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், நிரந்தர வருமானவரி கணக்கு எண் (பான் கார்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட மின்னணு அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு மின்னணு அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், பேரவை மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.