இளைஞரை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் சத்தியவாணிமுத்து தெருவைச் சேர்ந்தவர் கௌதம்ராஜ்(25). பெயிண்டரான அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் (18), சந்தீப் (22), டேவிட் (20), செந்தில் (30) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கௌதம்ராஜ் சனிக்கிழமை பாடியநல்லூர் பேருந்து பணிமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது லோகேஸ்வரன் உள்ளிட்ட 4 பேர் அவரை சுற்றி வளைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த அவரை அங்கிருந்தவர்கள்108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கௌதம்ராஜ் மீதான தாக்குதல் தொடர்பான செங்குன்றம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, லோகேஸ்வரன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.