கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, பேரவைத் தொகுதி வாரிய அனுப்பப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வேலூர் மக்களவைத் தேர்தல் பணிகளுக்காக கடந்த மே மாதம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் இயந்திரங்கள் (விவி பேட்) ஆகியவை பேரவைத் தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டிருந்தன. இதில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் குறிப்பிடப்பட்டு வேலூர், பேர்ணாம்பட்டு, அணைக்கட்டு, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி தாலுகா அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
பின்னர், வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் அந்தந்த பேரவைத் தொகுதிகளிலேயே இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலூர் சுங்கச்சாவடி அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டன.
இதில், 15 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டால் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்பதன் அடிப்படையில் 3,752 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1,876 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,876 விவி பேட் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டதை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம், தேர்தல் அலுவலர்கள் பார்வையிட்டனர்.
போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்ட பிறகு, புதிய வேட்பாளர்கள் பெயர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் இயந்திரங்களில் பொருத்தப்பட்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.