வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் டி.எம்.கதிர்ஆனந்த், அணைக்கட்டு பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கருகம்பத்தூரில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார். அவருக்கு ஆதரவாக கட்சியின் பொருளாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பூங்கோதை ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, துரைமுருகன் பேசியது: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த துரைமுருகன் இந்த மாவட்டத்துக்கு என்ன செய்தார் என்று எதிர்தரப்பினர் கேட்கின்றனர்.
ஒகேனக்கல் குடிநீர் வேலூர் கருகம்பத்தூர் வரை கொண்டு வந்தேன். பீடி, தீப்பெட்டித் தொழிலாளர்கள் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. ஆயிரம் வழங்கப்படுகிறது. தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றால் இந்தத் தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் பேசியது:
தமிழகத்தில் மத்திய அரசுத் துறைகளில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்படுகிறது. பெண்களுக்காகக் கொண்டு வரப்பட்ட நூறு நாள் வேலைதிட்டத்தையும் முடக்கி வைத்துள்ளனர். இதனால், தமிழகத்தில் வேலைவாய்ப்புப் பறிபோகிறது. ஏற்கெனவே, ரேஷன் கடைகளில் பொருள்கள் பற்றாக்குறையில் உள்ளன. நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டையை மத்திய அரசு கொண்டு வந்தால் தமிழக மக்களுக்கு அரிசி கிடைக்காது. தமிழக மக்களுக்கு எதிரானவற்றை திமுக தொடர்ந்து எதிர்க்கிறது என்றார் அவர்.