வேலூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல், பேரவை இடைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினக் கணக்குகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல், பேரவை இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடந்தது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்க மக்களவைத் தொகுதிக்கு 2 பேரும், 3 பேரவைத் தொகுதிகளுக்கும் தலா ஒருவர் வீதம் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது செலவினக் கணக்குகளை வரும் 22-ஆம் தேதிக்குள் பார்வையாளர்களிடம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செலவினக் கணக்குகளை முறையான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவித் தேர்தல் கணக்கு அலுவலரிடம் தாக்கல் செய்தனர்.
இதில், வேட்பாளர்களோ, அவர்களின் முகவர்களோ தேர்தலில் செலவழித்த முறையான ஆவணங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.