குடியாத்தத்தை அடுத்த இந்திரா நகரில் 12 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்ட 200 வீட்டுமனைப் பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவு செய்து தரக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே பொதுமக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திரா நகரில் கடந்த 2007-ஆம் ஆண்டு 200 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. ஆனால் இதுவரை அந்த பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவு செய்து தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பட்டாவைக் கொண்டு வீடு கட்ட வங்கிகளில் கடன் பெறவோ, மற்ற சலுகைகளை பெறவோ முடியவில்லை. பட்டா பெற்றவர்கள் 12 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்ச்சியில் இந்திரா நகர் பகுதி மக்களிடம் இருந்து திங்கள்கிழமை கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலர் கே.சாமிநாதன் தலைமையில் அங்கு வந்த பட்டாதாரர்கள் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களை கிராமக் கணக்கில் பதிவு செய்து தருமாறு அவர்கள் வலியுறுத்தினர். வட்டாட்சியர் சாந்தி அவர்களை அலுவலகத்திற்குள் அழைத்துப் பேசினார். இக்கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.