வேலூர்

தூத்துக்குடியில் காற்று, சூரிய மின் உற்பத்தியுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

DIN


தூத்துக்குடியில் காற்று, சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துடன், கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் 34-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசியது: 
நாட்டின் எதிர்காலத்துக்குச் சிறந்த முதலீடாக விளங்கும் அறிவுத்திறனை வளர்ச்சிக்கான வளமாக மாற்ற வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 20 முதல் 24 சதவீதம் உற்பத்தித் துறையிலும், 50 முதல் 54 சதவீதம் சேவைத்துறையிலும், 8 சதவீதம் வேளாண்துறை மூலமாகவும் கிடைக்கிறது. ஆனால், 65 சதவீதம் பேர் வேளாண் துறையில் பணியாற்றுகின்றனர். இதன் மூலம்அவர்களுக்கு முறையான வேலைவாய்ப்பு அளிக்க முடிவதில்லை. இதனால், கிராமப்புற, வேளாண் துறையில் வறுமையை ஒழிக்க முடியாத சூழல் நிலவுகிறது. புதிய ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளால் வேளாண் துறையை ஊக்குவித்து வேலைவாய்ப்புகளைப் பெருக்க முடியும். 
புதிய இந்தியா குறித்து பிரதமர் பேசி வருகிறார். அத்தகைய இந்தியாவின் தூண்களாக மாணவர்கள் உள்ளனர். திறமையான இளைஞர்களுக்கு பொறுப்புணர்வு அதிகளவில் உள்ளது. அரசு, தனியார் துறை என எங்கு பணி செய்தாலும், சொந்தமாக தொழில் தொடங்கினாலும் அவற்றில் தங்களது அனுபவம், அறிவுத்திறனை பயன்படுத்தி உயர்வை அடைய வேண்டும். 
சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறைக்கு ஆண்டுதோறும் ரூ.80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் ,ரூ.17 லட்சம் கோடி மதிப்பிலான சாலைப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தொழில்முனைவோருக்கு வணிகத்தில் தலைமைப் பண்பு அவசியம். திறமையான இளம் பொறியாளர்கள் வேலை தேடாமல் வேலை அளிப்பவராக மாற வேண்டும். 
நாட்டின் வளர்ச்சியில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 29 சவீதமும், ஏற்றுமதி 49 சதவீதமாகவும் உள்ளது. சிறு, குறு தொழில் துறை சார்பில் 11 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சிறு, குறு தொழில்களின் வளர்ச்சி பங்களிப்பை 50 சதவீதமாகவும், ஏற்றுமதியை 49 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. அதனை தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும். புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில் நுட்பத்தால் ஆச்சர்யங்களை ஏற்படுத்த முடியும். இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பை அதிகரித்து, நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதே அரசின் கொள்கையாக இருக்கிறது. அதற்காக மாணவர்கள் வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சிக்கான ஆராய்ச்சிகளில் அதிகளவில் ஈடுபட வேண்டும்.
தமிழகத்துக்காக ஒரு திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தில் காற்று, சூரிய ஒளி மின்சக்தி மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது. 
இதன்மூலம், ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.30க்கு அளிக்க முடியும். இந்த திட்டத்தை தூத்துக்குடி, பாரதீப், கண்ட்லா துறைமுகங்களில் செயல்படுத்துவதுடன், கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும். இந்தியாவில் 7500 கி.மீ தூரத்துக்கு கடற்கரை உள்ளன. இதன்மூலம், ரூ. 3க்கு குறைந்த விலையில் மின்சாரம் தயாரித்து வழங்க முடிவதுடன், சுத்திகரிக்கப்படும் தண்ணீரை விவசாயத்துக்கும் பயன்படுத்தலாம்.
கோதாவரியில் 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. அதனை உபயோகமாகப் பயன்படுத்த மாநில முதல்வர்களை அழைத்துப் பேசினேன். 
ஆனால், கர்நாடகம், தமிழகம் இடையே பிரச்னை தீராததால் இந்த திட்டம் அப்படியே உள்ளது என்றார் அவர்.
முன்னதாக, விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். விப்ரோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் விஸ்வாஸ் தீப் கௌரவ விருந்தினராக பங்கேற்றார். 
விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல் இயக்குநர் சந்தியா பென்ட்டரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT