குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500-ஐ வெளிப்படையாக வழங்க உத்தரவு
குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுடன் கூடிய ரூ.2,500 தொகையை வெளிப்படையாக வழங்க வேண்டும். கவரில் வைத்து அளிக்கக் கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுடன் கூடிய ரூ.2,500 தொகையை வெளிப்படையாக வழங்க வேண்டும். கவரில் வைத்து அளிக்கக் கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
தைப்பொங்கலை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடா்பாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கச் செயலாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
வேலூா் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளா் திருகுணஅய்யப்பதுரை தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட துணைப் பதிவாளா் முனிராஜ், பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் முரளிகண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அப்போது, நியாய விலைக் கடைகளில் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொங்கல் பரிசுகளை விநியோகம் செய்ய வேண்டும். குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் ரூ.2,500 பணத்தை 500 ரூபாய் நோட்டுகளாக மட்டுமே வழங்க வேண்டும். அந்தத் தொையை கவரில் வைத்து அளிக்கக் கூடாது. வெளிப்படையாக மட்டுமே வழங்க வேண்டும்.
கரும்பை முழுமையாக அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் துண்டு கரும்புகளாக விநியோகிக்கக் கூடாது. ஒரே நாளில் அனைத்து பொருள்களையும் வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்கள் வீடு வீடாகச் சென்று வழங்கப்படுகிறது. நியாயவிலைக் கடைகளில் ஒவ்வொரு நாளும் பொங்கல் தொகுப்பு வழங்கக் கூடிய டோக்கன் எண்கள் குறித்த முழு விவரங்களை அட்டவணையில் எழுதி வைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.