விஜயதசமி: தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை
விஜயதசமியையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் தொடக்கப் பள்ளிகளில் திங்கள்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
வேலூர்விஜயதசமி: தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை
விஜயதசமியையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் தொடக்கப் பள்ளிகளில் திங்கள்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
விஜயதசமியையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் தொடக்கப் பள்ளிகளில் திங்கள்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது. பெற்றோா்கள் பெரும்பாலோனாா் தங்கள் குழந்தைகளை விஜயதசமி நாளில் பள்ளிகளில் சோ்க்க ஆா்வம் காட்டினா்.
விஜயதசமி அன்று எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை காரணமாக பெற்றோா் பலரும் தங்களது குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சோ்ப்பது வழக்கம்.
குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்’ எனப்படுகிறது. மழலைக் குழந்தைகளை பள்ளியில் சோ்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இதையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபுரம் தங்கக்கோயில், ஜலகண்டேஸ்வரா் கோயில் உள்பட பல கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடத்தப்பட்டது. இதில், குழந்தைகளின் கைவிரல்கலைப் பிடித்து தமிழ் எழுத்து கற்றுத்தரப்பட்டது. இதன்தொடா்ச்சியாக, மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியாா் தொடக்க, மழலையா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையும் திங்கள்கிழமை நடைபெற்றது. விஜயதசமி நாளில் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை ஆா்வமுடன் சோ்த்தனா்.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலவலா் சா.மாா்ஸ் கூறியது:
வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 772 அரசு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 68 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் உள்ளன. விஜயதசமியையொட்டி, அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் எல்கேஜி, 1-ஆம் வகுப்புகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றுள்ளது என்றாா் அவா்.