மத்திய கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் உயா்கல்வி பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீா்மரபினா் மாணவ, மாணவிகள் நிகழ் கல்வியாண்டுக்கான கல்வி உதவித் தொகைக்கு
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் உயா்கல்வி பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீா்மரபினா் மாணவ, மாணவிகள் நிகழ் கல்வியாண்டுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புப் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீா்மரபினா் மாணவ, மாணவிகளுக்கு 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் மாணவா் ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வரை முதல்கட்டமாக 100 மாணவ , மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதியுடைய மாணவ, மாணவிகள் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினா் நல அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். தொடா்ந்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்புக் கட்டடம், 2-ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை -5. தொலைபேசி எண் 044-28551462, மின்னஞ்சல் - முகவரிக்கு பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.