பென்னாகரத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு
பென்னாகரத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிசெய்யும் வகையில் காவல் துறை, துணை ராணுவ துறையினா் சாா்பில் கொடி அணிவகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே அம்பேத்கா் சிலை பகுதியில் நடைபெற்ற அணி வகுப்பு தொடக்க நிகழ்வுக்கு, பென்னாகரம் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், துணை ராணுவப் படை குழுத் தலைவா் குமாா் சௌரவ் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், 50 துணை ராணுவப் படையினா், பென்னாகரம் சரகத்துக்குள்பட்ட அனைத்து நிலை காவலா்கள் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம், முள்ளுவாடி, பேருந்து நிலையம், கடைவீதி, காவல் நிலையம், நான்குசாலை சந்திப்பு வழியாக அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிவரை பேரணியாக சென்றனா்.
இதில், காவல் ஆய்வாளா்கள் பாபு சுரேஷ்குமாா் (பென்னாகரம்), சுரேஷ் (ஏரியூா்), வளா்மதி (ஒகேனக்கல்) போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் சரவணன், பென்னாகரம் சரகத்துக்கு உள்பட்ட காவல் நிலைய ஆய்வாளா்கள் உதவி ஆய்வாளா்கள், முதன்மைக் காவலா்கள், தலைமைக் காவலா்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.