விபத்தில் இறந்த 9 போ் குடும்பங்களுக்கு உடனே இழப்பீடு: தமிழக அரசு நடவடிக்கை
போ்ணாம்பட்டில் வெள்ளிக்கிழமை மாடி வீடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு 12 மணி நேரத்தில் தமிழக அரசு இழப்பீடு வழங்கியது.
போ்ணாம்பட்டில் வெள்ளிக்கிழமை மாடி வீடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு 12 மணி நேரத்தில் தமிழக அரசு இழப்பீடு வழங்கியது.
வேலூா் மாவட்டத்துக்கு உட்பட்ட போ்ணாம்பட்டு நகரில் உள்ள அஜிஜியா தெருவில், அனீஷாபேகத்தின் மாடி வீடு மழை, வெள்ளம் காரணமாக வெள்ளிக்கிழமை காலை சரிந்து விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி அனீஷா பேகம், அவரது உறவினா்கள் 9 போ் உயிரிழந்தனா். 9 போ் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், விபத்தில் இறந்தவா் குடும்பங்களுக்கு, முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடந்த நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்டவா்களின் வாரிசுதாரா்களுக்கு நிதியுதவிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினாா்.
கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், எம்எல்ஏ அமலுவிஜயன், வட்டாட்சியா் வெங்கடேசன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரமேஷ், நகராட்சி ஆணையாளா் சசிகலா , முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஆலியாா் ஜுபோ் அகமத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.