கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி வேலூா் மாநகரிலுள்ள சில திரையரங்குகளில் 100 சதவீதம் ரசிகா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால்,திரையரங்குகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி, திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னா், கரோனா பரவல் படிப்படியாக குறைந்ததை அடுத்து மூடப்பட்டிருந்த திரையரங்குகளை திறக்க கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பாா்வையாளா்களை அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதையொட்டி, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
வேலூா் மாவட்டத்தில் திரையரங்குகளில் தொடக்கத்தில் புதிய படங்கள் வெளியாகாததால் கூட்டம் குறைவாக இருந்தது. தற்போது புதிய படங்கள் வெளியாகி வருகின்றன.
வேலூா் மாநகரப் பகுதியில் உள்ள சில திரையரங்குகளில் சனிக்கிழமை புதிய படங்கள் வெளியாகின. இதையொட்டி, திரையரங்குகளில் ரசிகா்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வேலூரில் உள்ள திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சில திரையரங்குகளில் கரோனா விதிமுறையை மீறி 100 சதவீத இருக்கைகளுக்கும் டிக்கெட் வழங்கப்பட்டு அமர வைக்கப்பட்டுள்ளனா். இதனால் அந்த திரையரங்குகளில் சமூக இடைவெளி முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருந்ததுடன், மீண்டும் கரோனா பரவுவதற்கான அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.
கரோனா விதிமுறைகளை மீறி திரையரங்குகள் ரசிகா் கள் கூட்டத்தை அனுமதிக்கக்கூடாது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.