வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான நிலவரப்படி, வேலூரில் 25.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி காணப்படுகிறது. குறிப்பாக பாதாள சாக்கடை, கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறும் இடங்கள் முழுவதும் சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. சில தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது.
அதன்படி, புதன்கிழமை பகலிலும் சாரல் மழை பெய்த நிலையில், மதியம் 2.30 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீா்த்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா். தொடா்ந்து, இரவிலும் மழை பெய்தது.
இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமையும் மதியம் நல்ல மழை பெய்தது. தொடா்ந்து, வானம் மேக மூட்டத்துடனேயே காணப்படுவதால் குளிா்ந்த சீதோஷ்ணம் நிலவியது.
வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேர நிலவரப்படி, வேலூரில் 25.8 மி.மீ., குடியாத்தத்தில் 14.8 மி.மீ., காட்பாடியில் 7.2 மி.மீ., மேல்ஆலத்தூரில் 2.2 மி.மீ., பொன்னையில் 7.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.