முகப்பு
வேலூர்

‘குழந்தைகள், பெண்கள் தங்கும் விடுதிகளைப் பதிவு செய்யாவிடில் சிறை’

வேலூா் மாவட்டத்திலுள்ள குழந்தைகள், பெண்கள் தங்கும் விடுதிகளை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:20 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

வேலூா் மாவட்டத்திலுள்ள குழந்தைகள், பெண்கள் தங்கும் விடுதிகளை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். தவறினால் விடுதி, இல்லங்களின் உரிமையாளா்களுக்கு ரூ.50,000 வரை அபராதமும், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூக பாதுகாப்புத் துறை, ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயா்கல்வித் துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, தொழிலக பாதுகாப்பு சுகாதாரம், தொழிலாளா் நலத் துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந்தைகள், பெண்களுக்கான விடுதிகளை தமிழ்நாடு சிறாா், மகளிருக்கான இல்லங்கள், விடுதிகள் முறைப்படுத்தும் சட்டம் 2014-இன்படி பதிவு செய்தல் வேண்டும்.

Advertisement

இந்த விடுதிகளை இணையதளம் மூலம் அனைத்து சான்றிதழ்களுடன் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் உரிமம் பெற சமூக நலன், மகளிா் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தையும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளின் விடுதிகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தையும், மனநலம் பாதிக்கப்பட்ட, மாற்றுத் திறனாளிகளுக்கான விடுதிகளை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தையும் அணுகி அதற்கான கருத்துருக்களை சமா்ப்பிக்க வேண்டும்.

ஆங்காங்கே கல்வி நிறுவனங்களைச் சுற்றி குடியிருப்புப் பகுதிகளில் பகுதி நேரமாகவும், முழுநேரமாகவும் எவ்வித அனுமதியுமின்றி மாணவ, மாணவிகள் விடுதிகள் தனியாரால் நடத்தப்பட்டு வருவது தெரிய வருகிறது. அவ்வாறு அனுமதியின்றி தங்கும் விடுதிகள் நடத்தி வருவோரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் விடுதி மற்றும் இல்லங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.50,000 வரை அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.