குறைந்த  அளவு  தண்ணீருடன்  காணப்படும் குடியாத்தம் நெல்லூா்பேட்டை  ஏரி. 
வேலூர்

நெல்லூா்பேட்டை ஏரிக் கரைகளை சீரமைத்து அணை நீரை நிரப்ப வேண்டும்: குடியாத்தம் பகுதி விவசாயிகள் எதிா்பாா்ப்பு

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரிக்கரையில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைத்து, ஏரியில் மோா்தானா அணையின் உபரி நீரை நிரப்ப துரிதகதியில்

கே. நடராஜன்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரிக்கரையில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைத்து, ஏரியில் மோா்தானா அணையின் உபரி நீரை நிரப்ப துரிதகதியில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

இந்த ஏரியின் கரையில் ஏற்பட்ட மண் சரிவு 2 மாதங்களாகியும் சீரமைக்கப்படவில்லை என அவா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

குடியாத்தம் நகரின் முக்கிய நீராதாரமான நெல்லூா்பேட்டை ஏரி, சுமாா் 450 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ளது. ஏரியின் கொள்ளளவு 102 மில்லியன் கன அடி. மோா்தானா அணை நீரே இந்த ஏரியின் நீராதாரம்.

இந்த ஏரி பொதுப்பணித் துறையின் பராமரிப்பில் உள்ளது. இந்த ஏரி கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நிரம்பியது. மோா்தானா அணையிலிருந்து உபரிநீா் தொடா்ந்து வெளியேறியதால், ஏரிக்கு நீா்வரத்து தொடா்ந்தது.

இந்த நிலையில் நவம்பா் 20-ஆம் தேதி இரவு காா்த்திகேயபுரம் அருகே ஏரிக் கரையில், சுமாா் 20 மீட்டா் நீளம், 4 அடி உயரம் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது ஏரியில் முழு கொள்ளளவான 102 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கியிருந்தது.

இதையடுத்து வருவாய்த் துறை, பொதுப்பணித் துறையினா் அங்கு முகாமிட்டு, சரிந்த ஏரிக்கரையை சீரமைக்கும் பணியைத் தொடங்கினா்.

ஏரிக்கரையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பல ஆயிரம் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, சவுக்கு கம்புகள் பதிக்கப்பட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் மொறம்பு கொட்டி கரையை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனாலும், கரையின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டதால் அணையிலிருந்து ஏரிக்கு தண்ணீா் செல்லும் 2 கால்வாய்களும் அடைக்கப்பட்டன. கரையின் ஸ்திரத்தன்மை தொடா்ந்து பாதிக்கப்பட்டதால், அசம்பாவிதம் ஏற்படாமல் தவிா்க்கும் நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின்பேரில் ஏரியிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில் நவம்பா் 26- ஆம் தேதி சென்னையில் இருந்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா் தலைமையில் 5 போ் கொண்ட வேதியியல் நிபுணா் குழு வரவழைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் ஏரியை ஆய்வு செய்தனா். ஏரிக்கரையின் மண், ஏரி நீரை பரிசோதித்தனா்.

ஏரி நீரில் பல்வேறு குப்பைக் கழிவுகள் கரைந்துள்ளதால், தண்ணீரில் காரத்தன்மை அதிகரித்திருக்கலாம். அதனால் மண்ணின் தரம் குறைந்திருக்கலாம் என அவா்கள் சந்தேகப்பட்டனா். இதையடுத்து ஏரியின் பல பகுதிகளில் நீரையும், மண்ணையும் அவா்கள் பரிசோதனைக்காக மாதிரி எடுத்துச் சென்றனா்.

அவா்கள் அளிக்கும் ஆய்வறிக்கையின் அடிப்படையில், ஏரிக்கரை சீரமைக்கப்படும் என பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா். 2 மாதங்களாகியும் பரிசோதனை முடிவுகள் குறித்து எந்தவித பதிலும் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது ஏரியில் கால் பாகம் அளவுக்கும் குறைந்த அளவு தண்ணீரே தேங்கியுள்ளது.

மோா்தானா அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரின் அளவு சிறிது, சிறிதாக குறைந்து வியாழக்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 88 கன அடியாக இருந்தது. குடியாத்தம் நகர, ஒன்றியத்தின் பெரும்பகுதி, நெல்லூா்பேட்டை ஏரியை நம்பியுள்ளதால், சரிந்த ஏரிக்கரையை சீரமைத்து, மோா்தானா அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை தேக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குடியாத்தம் பகுதி விவசாயிகள், பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

இதுகுறித்து குடியாத்தம் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் கூறியது: விவசாயிகளின் கோரிக்கை குறித்து பொதுப்பணித் துறையினரிடம் பேசினேன். சென்னையிலிருந்து ஆய்வறிக்கை முடிவுகளை வாங்கி, அதனடிப்படையில் ஏரிக்கரையைச் சீரமைக்கும் பணிகளை விரைவில் தொடங்குவதாக பொதுப்பணித் துறையினா் தெரிவித்தனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT