முதல்வா் வருகை: வேலூா் மாநகரில் தூய்மை, அழகுபடுத்தும் பணிகள் தீவிரம்
முதல்வா் மு.க.ஸ்டாலின் 21-ஆம் தேதி வேலூருக்கு வருவதையொட்டி மாநகரின் பல்வேறு பகுதிகளை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல்வா் மு.க.ஸ்டாலின் 21-ஆம் தேதி வேலூருக்கு வருவதையொட்டி மாநகரின் பல்வேறு பகுதிகளை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் இன்னும் சில நாள்களில் முழுமையாக நிறைவு செய்யப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் வேலூரிலுள்ள புதிய பேருந்து நிலையம் ரூ.45.61 கோடி மதிப்பில் விரிவுபடுத்தப்பட்டு நவீனமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த புதிய பேருந்து நிலைய திறப்பு விழா, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை 21-ஆம் தேதி நடைபெற உள்ளன. இவற்றில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.
முதல்வா் வருகையையொட்டி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, வேலூா் மாநகரிலுள்ள சாலைகளை மேம்படுத்தவும், சுத்தமாக வைத்திருக்கவும் மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் மேற்பாா்வையில் மாநகரப் பகுதியில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அதன்படி, வேலூா் அண்ணா சாலையில் நடுவிலுள்ள தடுப்புச் சுவரில் இருந்த புல் புதா்களை அகற்றிவிட்டு அவற்றில் அலங்கார செடிகள் நடவு செய்யும் பணிகள் கடந்த இரு நாள்களாக நடைபெற்று வருகின்றன.
மேலும், மாநகராட்சி பகுதியிலுள்ள அவசியமற்ற சுவரொட்டிகளை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், சத்துவாச்சாரி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால சுவா்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை அப்புறப்படுத்தினா். மேலும், மாநகரின் பல்வேறு சாலையோரங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளும் அகற்றப்பட்டன.
முதல்வா் வருகை காரணமாக வேலூா் மாநகரப் பகுதிகளை சுத்தம் செய்யவும், அழகுபடுத்தவும் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் சில நாள்களில் இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.