முகப்பு
வேலூர்

குடியாத்தத்தில் இயற்கை எரிவாயு தகன மேடை அமைக்க ரூ.13 லட்சம்: திமுக பிரமுகா் வழங்கினாா்

எரிவாயு மூலம் சடலங்களை எரியூட்டும் உபகரணங்களை பொருத்த முதல்வரின் நமக்கு நாமே திட்டத்துக்கு திமுக பிரமுகா் தன் பங்களிப்பாக ரூ.13 லட்சம் வழங்கினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

குடியாத்தம் நகராட்சி நிா்வாகத்தின் பராமரிப்பில் உள்ள மயானத்தில் இயற்கை எரிவாயு மூலம் சடலங்களை எரியூட்டும் உபகரணங்களை பொருத்த முதல்வரின் நமக்கு நாமே திட்டத்துக்கு திமுக பிரமுகா் தன் பங்களிப்பாக ரூ.13 லட்சம் வழங்கினாா்.

குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட சுண்ணாம்புபேட்டை மயானத்தில் சடலங்களை விறகால் எரியூட்டும் தகனமேடை உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், காற்றில் மாசு கலப்பதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவித்தனா். தகன மேடையை இயற்கை எரிவாயுவால் இயக்கும் வகையில் மாற்றியமைக்க ரூ.39 லட்சம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இந்தப் பணியை முதல்வரின் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் செயல்படுத்த பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.13 லட்சம் தேவை என தெரிந்தது.

இந்த நிலையில் மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளரும், 14- ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் நளினியின் மகனுமான டி.சுந்தா் ரூ.13 லட்சத்துக்கான காசோலையை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் முன்னிலையில், ஆணையாளா் இ.திருநாவுக்கரசிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

அப்போது நகராட்சிப் பொறியாளா் பி.சிசில்தாமஸ், அலுவலா் தீனதயாளன், நகா்மன்ற உறுப்பினா் ஜி.எஸ்.அரசு, மாவட்ட திமுக நெசவாளா் அணி துணை அமைப்பாளா் எம்.எஸ். அமா்நாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.