விமான நிறுவனங்களுக்கு நெருக்கடி: கடந்த 10 ஆண்டுகளில் 11 நிறுவனங்கள் வெளியேற்றம்!
பாஜக தலைமையிலான ஆட்சியில் விமான நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதா?
புது தில்லி : இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 11 விமான நிறுவனங்கள் மூடப்பட்டன என்ற புள்ளிவிவரத்தை மத்திய அரசு இன்று(மார்ச் 23) வெளியிட்டது.
மாநிலங்களவையில் இன்று இது தொடர்பான கேள்வியொன்றுக்கு சிவில் விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் முரளீதர் மோகோல் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது :
“கடந்த 2016 முதல், விமான போக்குவரத்துச் சந்தையிலிருந்து 11 நிறுவனங்கள் வெளியேறியுள்ளன. வருவாய் அழுத்தம், விமானங்கள் பற்றாக்குறை மற்றும் கையிருப்பில்லை, பிற உள்விவகார பிரச்னைகள் ஆகியற்றால் இந்த வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது.
Advertisement
ஏர் ஆசியா (இந்தியா) பிரைவேட் லிமிடட் (இப்போது, ஏஐஎக்ஸ் கனெக்ட் பிரைவேட் லிமிடட்) நிறுவனம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடட் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதாகவும் டாட்டா எஸ்ஐஏ ஏர்லைன்ஸ் லிமிடட் (விஸ்தாரா) ஏர் இந்தியா லிமிடட் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “விமான போக்குவரத்து துறை சீராகச் செயல்படவில்லை; விமான நிறுவனங்கள் வணிக நோக்கத்துடன் செயல்படுகின்றன. ஆனால், அரசு இத்துறையில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
கிங்ஃபிஷெர் விமான நிறுவனம் இந்திய விமான ஆணையரகமான ஏஏஐ-க்கு செலுத்தவேண்டிய கடன் நிலுவைத் தொகை ரூ. 380.51 கோடி. அந்நிறுவனம் கடந்த 2012-இல் தமது விமான சேவையை நிறுத்திக்கொண்டு வெளியேறியது.
ஏஏஐ-க்கான ட்ரூஜெட் நிறுவனத்தின் கடன் நிலுவைத்தொகை ரூ. 0.03 கோடி. ஜெட் ஏர்வேஸ் மற்றும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனங்களுக்கு கடன் நிலுவை இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.