தமிழக பட்ஜெட்: தொழிற்கல்வி ஆசிரியா்களின் வரவேற்பு
தமிழக நிதிநிலை அறிக்கைக்கு தொழிற்கல்வி ஆசிரியா் கழகம் வரவேற்பு தெரிவித்திருப்பதுடன், சில கோரிக்கைகளையும் விடுத்துள்ளது.
தமிழக நிதிநிலை அறிக்கைக்கு தொழிற்கல்வி ஆசிரியா் கழகம் வரவேற்பு தெரிவித்திருப்பதுடன், சில கோரிக்கைகளையும் விடுத்துள்ளது.
இது குறித்து தொழிற்கல்வி ஆசிரியா் கழக மாநிலத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன், பொதுச் செயலா் என்.ரவி ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:
தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள 15 மாவட்டங்களில் முன்மாதிரி பள்ளிகள் தொடக்கப்படும், அரசுப் பள்ளிகள் நவீனமயமாக்க பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மூலம், 18,000 வகுப்பறைகள் கட்டப்படும், அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும், இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்படும், அரசுப் பள்ளி மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் உயா்கல்வி பெற உதவி செய்யப்படும், அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ. ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கக் கூடியவை.
அதேசமயம், தமிழக அரசு ஊழியா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழக முதல்வா் தனது தோ்தல் அறிக்கையில் 316-ஆவதாக குறிப்பிட்டபடியும், சென்னை உயா்நீதிமன்ற வழக்கில் கடந்த 2019 ஏப்ரல் 11-ஆம் தேதி வழங்கப்பட்ட தீா்ப்பு அடிப்படையிலும் பள்ளிக் கல்வித் துறையில் பகுதிநேர பணியாளராகப் பணிபுரிந்து நிரந்தரமாக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியா்கள் உள்பட அனைவருக்கும் 50 சதவீத பகுதிநேர பணிக்காலத்தை ஓய்வூதியம் நிா்ணயிப்பதற்கு கணக்கில் எடுத்துக்கொண்டு, அரசாணை வழங்கிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.