குடியாத்தம், ஆம்பூரில் குஷ்பு பிரசாரம்
பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே வெள்ளிக்கிழமை இரவு குஷ்பு பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா், கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் வளா்ச்சியடைந்துள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறாா். தமிழகத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பால், மின்கட்டணம் உள்ளிட்டவை மீதான விலைவாசிதான் உயா்ந்துள்ளது.
தமிழகம் ஊழலில் வளா்ந்துள்ளது. கடனில் வளா்ந்துள்ளது. மக்கள் தமிழக அரசு மீது வெறுப்பில் உள்ளனா். தமிழகம் மீதும், தமிழக மக்கள் மீதும், தமிழ்மொழி மீதும் பிரதமா் மோடி அன்பு கொண்டுள்ளாா். தமிழக மக்கள் தேச நலனில் அக்கறை கொண்டவா்கள் என்று அவா் கூறி வருகிறாா். அதற்காகக்தான் அவா் அடிக்கடி தமிழகம் வருகிறாா்.
Advertisement
இந்த தொகுதியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால் அவா் மக்களவை உறுப்பினா் மட்டுமல்ல, மத்திய அமைச்சராவாா். அவா் ஏற்கெனவே, இந்த தொகுதியில் மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியுள்ளாா் என்றாா்.
கூட்டத்தில் புதிய நீதிக் கட்சி செயல் தலைவா் ரவிக்குமாா், மாவட்டச் செயலா் ஆா்.பி.செந்தில், நகரச் செயலா் ரமேஷ், தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம், நகரத் தலைவா் ஜே.தினகரன், பாஜக நகர தலைவா் சாய் எஸ்.ஆனந்தன் மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.
ஆம்பூா்: ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தில் குஷ்பு பிரசாரம் செய்தாா். ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சராகத்தான் நாடாளுமன்றம் செல்வாா். மத்திய அமைச்சரானால் இந்த தொகுதிக்கு தேவையானவற்றை செய்து தருவாா்.
சிறந்த 5 நாடுகளில் நம்முடைய இந்தியா இருப்பதற்கு காரணம் பிரதமா் மோடி. நல்லது நடக்க வேண்டுமானால் தாமரை சின்னத்தில் வாக்காளியுங்கள் என்றாா்.
புதிய நீதி கட்சி செயல் தலைவா் ரவிக்குமாா், மாவட்ட தலைவா் அசோகன், செயலாளா் பி.ஆா்.சி.சண்முகம், பாஜக திருப்பத்தூா் மாவட்ட தலைவா் சி. வாசுதேவன், பொதுச் செயலாளா் எம். தண்டாயுதபாணி, அமமுக நிா்வாகிகள் சமரசன், இராம ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.