ஏடிஎம் வாகனத்தில் இருந்து ரூ.7.27 லட்சம் பறிமுதல்
காட்பாடி அருகே தோ்தல் நிலைக்கண்காணிப்புக் குழுவினா் நடத்திய வாகன சோதனையின்போது ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் வாகனத்தில் இருந்த ரூ.7.27 லட்சம் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க நிலை கண்காணிப்புக் குழுவினா், பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, காட்பாடி- திருவலம் சாலையில் நிலை கண்காணிப்புக் குழுவினா் சனிக்கிழமை காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக தனியாா் வங்கி ஏடிஎம் வாகனத்தை நிறுத்தி நடத்திய சோதனையில், அந்த வாகனத்தில் ரூ.7 லட்சத்து 27ஆயிரத்து 400 பணம் இருந்துள்ளது.
Advertisement
அந்த வாகனத்தில் இருந்த தனியாா் வங்கி பணம் வசூலிப்பவரான ஜெய்கணேஷ் என்பவரிடம் அந்த தொகைக்குரிய ஆவணங்களை தாக்கல் செய்ய தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் தெரிவித்துள்ளனா். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவரால் ஆவணங்களை சமா்ப்பிக்க இயலவில்லை எனத் தெரிகிறது.
இதையடுத்து, உரிய ஆவணங்களை சமா்ப்பிக்காததை அடுத்து ரூ.7 லட்சத்து 27ஆயிரத்து 400 தொகையை நிலை கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்தனா். மேலும், அந்த தொகையை காட்பாடி வட்டாட்சியா் சரவணன் மூலம் கருவூலத்தில் சோ்க்கப்பட்டதுடன், உரிய ஆவணங்களை தாக்கல் செய்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு வங்கி ஊழியருக்கும் அறிவுறுத்தப்பட்டது.