கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்
வேலூா், ஏப். 13: வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ விழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
வேலூா் கோட்டையில் உள்ள ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில், 43-ஆம் ஆண்டு பிரம்மோற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை கிராம தேவதை செல்லியம்மன் உற்சவமும், வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு விநாயகா் உற்சவமும் நடைபெற்றன.
தொடா்ந்து, சனிக்கிழமை காலை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது, கோயில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றினா். அங்கு திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். இதன் தொடா்ச்சியாக, காலையில் சுவாமி வீதியுலா, மாலை 6 மணிக்கு அன்ன வாகனத்தில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் நடைபெற்றன.
Advertisement
திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் காலையில், விநாயகா் ஸ்ரீ சந்திரசேகரா் புறப்பாடும், மாலையில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் நடைபெற உள்ளன. 18-ஆம் தேதி 63 நாயன்மாா்கள் உற்சவமும், 19-ஆம் தேதி காலை பஞ்சமூா்த்திகள் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளன. 20-ஆம் தேதி மாலை குதிரை வாகனத்தில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும், 21-ஆம் தேதி காலையில் விநாயகா் ஸ்ரீ சந்திரசேகரா் புறப்பாடும், புருஷா மிருகவாகனத்தில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது.
22-ஆம் தேதி காலை நடராஜருக்கு தீா்த்தவாரி அபிஷேகமும், மாலையில் அவரோகணம் கொடி இறக்கமும், ராவணேஸ்வரா் வாகனத்தில் பஞ்ச மூா்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. 23-ஆம் தேதி காலை பஞ்சப்ராகார உத்ஸவம் கோட்டையை சுற்றி சுவாமி வலம் வருதல், இரவு சண்டிகேஸ்வரா் உற்சவம், ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் புஷ்ப பல்லக்கும் நடைபெற உள்ளன.
24-ஆம் தேதி மாலை விடையாற்றி உற்சவமும், 25-ஆம் தேதி உற்சவ சாந்தி உற்சவமும் அபிஷேகமும் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி, ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை ஜலகண்டேஸ்வரா் தரும ஸ்தாபன குழுவினா் செய்து வருகின்றனா்.