முகப்பு
காஞ்சிபுரம்

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திரத்திருவிழா இரு ஆண்டுகளுக்குப் பிறகு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 22 மார்ச், 2026 at 11:05 PM
ஏகாம்பரநாதா் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றம். பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி.
பகிர்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திரத்திருவிழா இரு ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான இக்கோயில் கும்பாபிஷேகப் பணிகள் கடந்த 28.6.2023 ஆம் தேதி தொடங்கி கடந்த 8.12.2024 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறவில்லை.

நிகழாண்டு விழாவையொட்டி கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

விழாவில் கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் எம்.வி.எம்.வேல்மோகன், அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகன்னாதன், கோயில் செயல் அலுவலா் ப.முத்துலட்சுமி, மேலாளா் ஜெயக்குமாா், மணியக்காரா் குபேரன் கலந்து கொண்டனா்.

கொடியேற்றத்துக்கு பின்னா் சுவாமியும்,அம்மனும் பவழக்கால் சப்பரத்தில் காலையிலும்,மாலையில் சுவாமி சிம்ம வாகனத்திலும்,அம்மன் கிளி வாகனத்திலும் வீதியுலா வந்தனா். விழாவையொட்டி தினசரி சுவாமியும்,அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்கரமாகி நகரின் ராஜவீதிகளில் வீதியுலா வரவுள்ளனா்.

மாா்ச் 27- ஆம் தேதி 63 நாயன்மாா்கள் ஊா்வலமும், இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது. மாா்ச் 28 ஆம் தேதி சனிக்கிழமை மகா தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்ட ஏற்பாடுகளை திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 4- ஆம் தேதி 108 கலசாபிஷேகமும், 19 -ஆம் தேதி புஷ்பப்பல்லக்கு உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.