பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்!
பட்டீசுவரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா பற்றி..
கோவை பேரூர் பட்டீசுவரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவையில் பேரூரில் சோழர்களால் கட்டப்பட்ட பழமையான பட்டீசுவர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று நந்தி சின்னம் பொறிக்கப்பட்ட கொடிக்குப் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், கோயில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது. மாலை யாகசாலை பூஜை நடக்கிறது. இரவு மலர் பல்லாக்கு நடைபெறுகிறது. இந்த விழாவைத் தொடர்ந்து தினமும் காலையிலும் மாலையிலும் பட்டீசுவரர் பச்சை நாயகி அம்மனுக்கு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருகின்றனர்.
27 ம் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி, மறுநாள் 28 ம் தேதி சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 29 ம் தேதி மாலை 4 மணிக்கு பங்குனி உத்திர தேரோட்ட விழா நடைபெறுகிறது. தேரோட்டத்தைப் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைக்கின்றனர். 31 ஆம் தேதி தெப்பத் திருவிழா ஏப்ரல் 1 ம் தேதி நடராஜர் அபிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளைக் கோயில் உதவி ஆணையர் சத்தியவதி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.