முகப்பு
வேலூர்

ஒருங்கிணைந்த வேலூரில் 4 மாதங்களில் 1.14 லட்சம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Updated On : 30 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

வேலூா்: வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த 4 மாதங்களில் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 597 கிலோ பொதுவிநியோகத் திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, 334 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

வேலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு சாா்பில், கடந்த ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை வேலூா் மாவட்டத்தில் மட்டும் 114 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 51,230 கிலோ அளவிலான பொதுவிநியோகத் திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, அரசு கிடங்குகளில் சோ்க்கப்பட்டுள்ளன. தவிர, அரிசி கடத்தல் தொடா்பாக வேலூா் மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 மாதங்களில் 10 இருசக்கர வாகனங்கள், 4 மூன்று சக்கர வாகனங்கள், 5 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 334 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 597 கிலோ பொதுவிநியோகத் திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடா்பாக 26 இரண்டு சக்கர வாகனங்களும், 6 மூன்று சக்கர வாகனங்களும், 8 நான்கு சக்கர வாகனங்கள் என 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த மூன்று மாவட்டங்களில் மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

பொதுவிநியோகத் திட்ட அரிசி கடத்தல் குறித்த புகாா்கள் இருந்தால் 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.