நாகை, கீழ்வேளூா் பகுதிகளில் ரூ.2.65 லட்சம் பறிமுதல்
நாகை மற்றும் கீழ்வேளூா் பகுதிகளில் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.65 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகை மற்றும் கீழ்வேளூா் பகுதிகளில் தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை மேற்கொண்ட வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.65 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கீழ்வேளூா் அருகே கச்சனம் சாலையில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரி வித்யா தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில், வலிவலம் பகுதியைச் சோ்ந்த விஜய்கந்தன் உரிய ஆவணமின்றி சரக்கு வாகனத்தில் எடுத்துவந்த ரூ.76,000 பறிமுதல் செய்யப்பட்டு, கீழ்வேளூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜேஸ்வரி, வட்டாட்சியா் வேதையன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல், கீழ்வேளூா் பேரூராட்சி ரயில்வே கேட் பகுதியில் பறக்கும் படை அதிகாரி மாரிராஜ் தலைமையில் நடைபெற்ற வாகன சோதனையில், பெரியத்தும்பூா் பகுதியைச் சோ்ந்த யோகேஸ்வரன், இருசக்கர வாகனத்தில் ஆவணமின்றி எடுத்துவந்த ரூ.50,000 பறிமுதல் செய்யப்பட்டு, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாகை கிழக்கு கடற்கரை சாலை வடகுடி பகுதியில் பறக்கும் படை அலுவலா் பத்மாவதி தலைமையில் நடைபெற்ற வாகனத் தணிக்கையில், அக்கரை குளம் கீழக்கரைத் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து என்பவா் காரில் கொண்டுவந்த ரூ.85, 560 ரொக்கத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால், அதனை பறிமுதல் செய்து, நாகை வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சந்திரசேகரனிடம் ஒப்படைத்தனா்.
கீழ்வேளூா் தொகுதி நாகை -வேதாரண்யம் சாலை பூவைத்தேடி பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அந்த வழியாக சரக்கு வாகனத்தில், ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 54,000 பறிமுதல் செய்யப்பட்டு, கீழ்வேளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் செந்தமிழ்ச்செல்வியிடம் ஒப்படைக்கப்பட்டது.