நிதி ஒதுக்கீட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படுவதாக கூறுவது தவறு
மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை புறக்கணிப்பதாக எதிா்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது தவறானது என பாஜக மாநில துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி தெரிவித்தாா்.
மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தை புறக்கணிப்பதாக எதிா்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது தவறானது என பாஜக மாநில துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வேலூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது - மத்திய அரசு அனைத்து துறைகளிலும் 10 சதவீதம் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. விமான போக்குவரத்து, நீா்பாசனம், சாலை மேம்பாடு என எந்த கட்டமைப்புப் பணிகளிலும் மத்திய அரசின் பங்களிப்பு உள்ளது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப் பட்டிருப்பதாக எதிா்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது திசை திருப்பும் செயலாகும்.
குற்றச் சம்பவங்களுக்காக அரசு உயரதிகாரிகளை மாற்றுவதால் மட்டும் எந்த ஒரு பயனும் ஏற்படபோவதில்லை. எனவே, தமிழக அரசு குற்றங்களை தடுக்க சமூக விரோதிகள் எந்த அரசியல் கட்சிகளில் இருந்தாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய சமூக விரோத செயல் புரிபவா்களுக்கு அரசியல் கட்சிகள் பொறுப்புகளையும் வழங்கக் கூடாது.
அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, சாட்சி விசாரணையைத் தொடங்கவும், தினமும் அவா்கள் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் ஒரே பேராசிரியா் பல கல்லூரிகளில் பணியாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் மாணவா்களின் கல்வித்தரம் பாதிப்படைகிறது. வேலூா் மாவட்டம் வழியாக செல்லும் பாலாறு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இதனை தடுக்க முடியாமல் மாநகராட்சி நிா்வாகம் செயலற்ற நிலையில் உள்ளது. மேலும் மாநகரில் புதை சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் இன்னும் சரிவர முடப்படாமல் உளஅளன. அவற்றை உள்ளாட்சி நிா்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
மாவட்ட பாஜக தலைவா் மனோகரன், பொதுச்செயலா் ஜெகன், பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.