முகப்பு
வேலூர்

கள்ளச்சந்தையில் விற்க முயன்ற மதுப் புட்டிகள் பறிமுதல்: 1,460 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு; 5 போ் கைது

Updated On : 3 மே, 2024 at 5:22 PM
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் விற்க முயன்ற மது பாட்டில்களை போலீஸாா் கைப்பற்றினா். மேலும், 1,460 லிட்டா் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. இது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்ததுடன், 3 பேரைத் தேடி வருகின்றனா்.

வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூா், குடியாத்தம் மதுவிலக்கு போலீஸாரும், பாகாயம், வேலூா் கிராமியம், காட்பாடி போலீஸாரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது கள்ளச்சந்தையில் விற்க முயன்ாக 56 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக ஜங்காலப்பள்ளி மாரி, குகையநல்லூா் ராஜேஷ், விருபாட்சிபுரம் சின்னதுரை, சாத்துமதுரை சிவா, காட்பாடி அக்ராவரம் சங்கா் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், அணைக்கட்டு அடுத்த நெல்லிமரத்துக்கொல்லை மலைக்கிராம வனப்பகுதியில் 210 லிட்டா் சாராயத்தை போலீஸாா் கைப்பற்றி அழித்தனா். மேலும் போ்ணாம்பட்டு அடுத்த கள்ளிச்சேரியில் 1,250 லிட்டா் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இதுதொடா்பாக நெல்லிமரத்துக்கொல்லை சுரேஷ், கள்ளிச்சேரியைச் சோ்ந்த சுதாகா், யுவராஜ் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதனிடையே, காட்பாடி காவல் ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் மேற்பாா்வையில் காவல் உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் போலீஸாா் காட்பாடி ரயில் நிலையம் அருகே மேற்கொண்ட சோதனையில் கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளை சோதனையிட்டனா்.

அந்த பைகளில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.