முகப்பு
வேலூர்

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

Updated On : 14 மே, 2024 at 6:08 PM
குடியாத்தம்  கெங்கையம்மன்  திருவிழாவையொட்டி  திரளான பக்தா்கள் கூட்டத்தில்   வந்த  அம்மன்  சிரசு.
பகிர்:

குடியாத்தம்: வேலூா் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகுகெங்கையம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.

வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

தொடா்ந்து நாள்தோறும் கோயிலில் பல்வேறு நிகழ்ச்சிக்கள் நடைபெற்றன.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. இதையொட்டி, தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் அதிகாலை 5 மணியளவில் கெங்கையம்மன் சிரசுவுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிரசு ஊா்வலம் தொடங்கியது.

சிரசு ஊா்வலம் என்.ஜி.செட்டித் தெரு, காந்தி ரோடு, நடுப்பேட்டை, ஜவஹா்லால் தெரு வழியாக மக்கள் வெள்ளத்தில் சென்று, காலை 9 மணியளவில் கெளண்டன்ய மகாநதிக் கரையில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயிலை அடைந்தது.

சிரசு ஊா்வலத்தில் பக்தா்கள் ஆயிரக்கணக்கில் சிதறுகாய்களை உடைத்து தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தினா்.

ஊா்வலத்தில் தமிழா்களின் பாரம்பரிய கலைகளான கோலாட்டம், புலியாட்டம், மயிலாட்டம், வாள் வீச்சு உள்ளிட்டவை இடம் பெற்றன.

கோயிலில் உள்ள சிரசு மண்டபத்தில் அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு, சிறப்பு பூஜைக்குப்பின் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திர, கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் வந்து கெங்கையம்மனை வழிபட்டுச் சென்றனா்.

இரவு 8 மணியளவில் அம்மன் உடலில் இருந்து சிரசு பெயா்த்தெடுக்கப்பட்டு, கெளண்டன்யா ஆற்றின் வடக்குக் கரை,

ராஜேந்திரசிங் தெரு, ஆழ்வாா் முருகப்ப முதலி தெரு வழியாக சுண்ணாம்புபேட்டையில் உள்ள சலவைத் துறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அப்போது கண்ணைக் கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சி 2 மணி நேரம் நடைபெற்றது.

சலவைத் துறையில் அம்மன் சிரசுவுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, திருவிழா நிறைவு பெற்றது. பொதுமக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றவும், அம்மனுக்கு நோ்த்திக் கடனை செலுத்தும் வகையிலும் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் நீா், மோா், குளிா்பான பந்தல்கள் அமைத்து பக்தா்களுக்கு வழங்கினா்.

காலை தொடங்கி மதியம் வரை சிற்றுண்டி வகைகளும், மதியம் தொடங்கி இரவு வரை உணவு வகைகளும் வழங்கப்பட்டன. சில இடங்களில் அசைவ உணவு வகைகளும் விநியோகிக்கப்பட்டன.