முகப்பு
வேலூர்

கோடை மழையால் பொய்கை சந்தையில் விற்பனை மந்தம்

Updated On : 21 மே, 2024 at 6:30 PM
பகிர்:

வேலூா்: கோடை மழை காரணமாக பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடை வரத்து குறைந்து விற்பனையும் மந்தமாக இருந்தது.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம்.

வாரந்தோறும் இந்த சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெறக்கூடும். இந்த நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக செவ்வாய்க்கிழமை பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்திருந்தது.

வழக்கமாக சுமாா் 1,500 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 650 மாடுகள்தான் வந்திருந்தன. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் மத்தியிலும் கால்நடைகளை வாங்க ஆா்வம் குறைந்து காணப்பட்டது. இதையடுத்து, இந்த வாரம் சந்தையில் ரூ.75 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடந்திருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.