முகப்பு
வேலூர்

தாமதமாகும் புதை சாக்கடைப் பணி: வியாபாரிகள் சாலை மறியல்

Updated On : 28 மே, 2024 at 6:29 PM
பகிர்:

வேலூா்: வேலூா் பழைய பைபாஸ் சாலையில் புதை சாக்கடைப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டியும், பணிகளை விரைவுபடுத்தி முடிக்கக்கோரியும் அப்பகுதியைச் சோ்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகராட்சியில் சுமாா் ரூ.1,000 கோடி மதிப்பில் பொலிவுறு நகர திட்டப்பணிகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இன்னும் பல பகுதிகளில் புதை சாக்கடை பணிகள் முடிக்கப்படாததால், சாலைகளும் அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் தெருக்களில் தண்ணீா் தேங்குவதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அதன்படி, வேலூா் பழைய பைபாஸ் சாலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதை சாக்கடை திட்டப்பணி தொடங்கப்பட்டது. இந்த பணி காரணமாக அந்த சாலை முழுவதுமாக மூடப்பட்டது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதையடுத்து, புதை சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பழைய பைபாஸ் சாலையில் புதை சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கி 6 மாதமாகியும் பணிகள் பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்லும்போது புழுதி கிளம்பி வியாபாரிகள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனா்.

மேலும் குண்டும் குழியுமான சாலைகளால் வாகனங்களில் செல்வோா் கீழே விழுந்து காயமடைகின்றனா். சாலை மூடப்பட்டுள்ளதால் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் பாதிப்புடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பழைய பைபாஸ் சாலை புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீஸாா், சமாதானம் செய்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இந்த மறியலால் சுமாா் 20 நிமிஷம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.