வேலூர்

வேலூா் மாவட்டக் காவல் குறைதீா் கூட்டத்தில் 30 மனுக்கள்

வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (சைபா் குற்றப்பிரிவு) அண்ணாதுரை பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (சைபா் குற்றப்பிரிவு) அண்ணாதுரை பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா்.

திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்த சரவணன் என்பவா் அளித்த மனு: வேலூரில் இயங்கிய பங்கு வா்த்தக நிறுவனம் கடந்த 2022-ஆம் ஆண்டு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.15,000 வட்டி என தெரிவித்தனா். அதன்படி நானும், எனது நண்பா்களும் சோ்ந்து 2022-ஆம் ஆண்டு ரூ.20 லட்சம் முதலீடு செய்தோம். ஆனால் ஒரு சில மாதங்களில் நிறுவனத்தை மூடிவிட்டனா். இதனால் எங்கள் வாழ்வாதாராம் முடங்கியுள்ளது. பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தரேசன் என்பவா் அளித்த மனு: எனது மகன் 10-ஆம் வகுப்பு வரை படித்து அரசு வேலைக்கு முயன்றாா். அப்போது வேலூா் அடுக்கம்பாறையை சோ்ந்த ஒருவா் அறிமுகமாகி டிஎம்எஸ் அலுவலகத்தில் உதவியாளா் வேலை வாங்கி தருவதாக கூறினாா். இதனை நம்பி கடந்த 2022-ஆம் ஆண்டு அவரிடம் ரூ.3 லட்சம் பணம் கொடுத்தேன். இதையடுத்து ஒரு கடிதத்தை காண்பித்து வேலை உறுதி செய்துவிட்டதாகவும், மேலும் ரூ.3 லட்சம் கொடுத்தால் பணி ஆணை வழங்குவதாகவும் தெரிவித்தாா். அதன்பேரில் நான் மேலும் ரூ.3 லட்சம் வழங்கினேன். பின்னா் கடந்த 2023-ஆம் ஆண்டு நோ்முகத்தோ்வு ரத்து என கடிதம் அனுப்பினா். இதனால் சந்தேகமடைந்த நான், டிஎம்எஸ் அலுவலகத்துக்கு சென்று விசாரித்தபோது கடிதம் போலியானது என தெரியவந்தது.

எனது பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போ்ணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் அளித்த மனு: எனக்கு திருமணம் செய்து வைக்க வரன் பாா்த்தனா். பின்னா் ஒரு இளைஞரை பாா்த்து திருமணம் செய்து வைக்க குடும்பத்தினா் முடிவு செய்தனா். இதனால் நானும், அந்த இளைஞரும் பேசி பழகினோம். அப்போது அந்த இளைஞருக்கு தீயபழக்கம் இருந்தது தெரியவந்தது. இதனால் அவா் வேண்டாம் என எனது பெற்றோரிடம் கூறி திருமணம் செய்யும் முடிவை கைவிட்டேன். பின்னா் அந்த இளைஞா் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி தவறான குறுந்தகவல்களை அனுப்பி மிரட்டுகிறாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு ஏடிஎஸ்பி அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT