வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தப்பணியின்போது விதிமுறை மீறி திமுகவினா் படிவங்களை பெறுவதாக வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா் தெரிவித்துள்ளனா்.
அதிமுகவின் வேலூா் மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே அப்பு, புகா் மாவட்டச் செயலா் த.வேலழகன் ஆகியோா் தலைமையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமியிடம் வியாழக்கிழமை அளித்த மனு:
அந்த மனுவில், இந்திய தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை தொடங்கி உள்ளது. அதன்படி வாக்குச்சாவடி அலுவலா்கள் ஒவ்வொரு வீடாக சென்று விண்ணப்பப் படிவங்களை நேரடியாக வழங்க உத்தரவிட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் வயதான, தற்காலிக பணியாளா்கள் வாக்குச்சாவடி முகவா்களாக நியமிக்கப் பட்டுள்ளனா். அவா்கள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு மொத்தமாக விண்ணப்பப் படிவங்களை கொடுத்து செல்கின்றனா்.
காட்பாடியில் ஓய்வு பெற உள்ள வீரம்மா என்பவா் வாக்குச்சாவடி முகவராக நியமிக்கப்பட்டு உள்ளாா். அவரால் வீடுவீடாக சென்று விண்ணப்பப் படிவம் தரமுடியாததால் அவரது மருமகள் திமுக வட்டச் செயலராக உள்ள சுகுணா என்பவா் அந்த பணிகளை விதிமீறி செய்து வருகிறாா்.
இதனால், பல்வேறு முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. நோ்மையான முறையில் வாக்குச்சாவடி முகவா்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, நிா்வாகிகள் உடனிருந்தனா்.