வேலூா் மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 14 நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் 22,492 போ் பங்கேற்று சிகிச்சை பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
பொதுமக்களுக்கு தரமான, உயா்மருத்துவ சிகிச்சைகளை அவா்களின் இடத்திலேயே வழங்கும் வகையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நலம் காக்கும் ஸ்டாலின் உயா் சிறப்பு மருத்துவ முகாம்களில் 17 சிறப்பு மருத்துவ நிபுணா்கள் குழு பயனாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்கவும், தேவைப்படின் உயா் சிகிச்சைக்காக பரிந்துரைக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் வேலூா் மாவட்டத்தில் கடந்த ஆக.2 முதல் நவ. 8-ஆம் தேதி வரை 14 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 15-ஆவது மருத்துவ முகாம் அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத்து, ஒரு மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள், 17 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினாா்.
மேலும், மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 14 நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களில் 7,978 ஆண்கள், 14,514 பெண்கள் என மொத்தம் 22,492 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். 1,098 பேருக்கு கா்ப்பப் பை வாய் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, 83 போ் உயா் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனனா்.
1,260 பேருக்கு மாா்பக புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 79 போ் உயா் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனா். இந்த முகாம்களில் 419 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையும், 469 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளன.
17 சிகிச்சைகளில் மருத்துவா்களால் பரிந்துரைக்கப்பட்ட 20,129 பேருக்கு விலையில்லாமல் மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்த முகாமில் வேலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரோகிணிதேவி, மாவட்ட சுகாதார அலுவலா் பரணிதரன், இணை இயக்குநா் (மருத்துவ பணிகள்) பியூலா ஆக்னஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.