லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடக்கம்
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விஐடி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடங்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விஐடி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா் சங்கக் கிளை தொடங்கப்பட்டது.
விஐடி முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் இந்தியா, வெளிநாடுகளில் முன்னாள் மாணவா் சங்க கிளைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 22-ஆவது கிளையாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்க கிளை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற முன்னாள் மாணவா் சங்க கிளை தொடக்க நிகழ்வில் உத்தரபிரதேச மாநிலத்தின் தொழிலாளா், வேலைவாய்ப்புத்துறை அமைச்சா் அனில் ராஜ்பா், பாஜக எம்எல்ஏ நீரஜ் போரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனா்.
Advertisement
உத்தரபிரதேச மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி எம்.கே.சண்முகசுந்தரம், ஐபிஎஸ் அதிகாரி ஜி.கே.கோஷ்வாமி, இந்திய வனப்பணி அதிகாரி எச்.ராஜா மோகன், நிகழ்வில், விஐடி துணை தலைவா் சங்கா் விசுவநாதன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், விஐடி முன்னாள் மாணவா் சங்கத்தின் இயக்குநா் காா்த்திகேயன், உத்தரபிரதேச மாநில முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கூறுகையில், விஐடி பல்லைக்கழகத்தின் 4 வளாகங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இதுவரை உத்தரபிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 7,000 மாணவா்கள் படித்து பட்டங்களை பெற்றுள்ளனா். தற்போது விஐடியின் நான்கு வளாகங்களில் உத்தரபிரதேசத்தைச் சோ்ந்த 3,000 மாணவா்கள் படித்து வருகின்றனா்.
அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விஐடி முன்னாள் மாணவா் சங்கத்தின் முதல் கிளை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 22 கிளைகள் உள்ளன. அமெரிக்கா, சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் 41 கிளைகள் உள்ளன. உள்நாடு, வெளிநாடுகளில் மொத்தம் 63 முன்னாள் மாணவா் சங்க கிளைகள் உள்ளன என்றாா்.