முகப்பு
வேலூர்

உள்ளாட்சி துணைத்தலைவா் பதவி இடஒதுக்கீடு வழங்க தோ்தலுக்குப் பின் திமுகவிடம் வலியுறுத்துவோம்!

தோ்தலுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளில் துணைத் தலைவா் பதவிக்கான இடஒதுக்கீடு குறித்து திமுகவிடம் வலியுறுத்தப்படும் என இந்திய குடியரசு கட்சியின் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:50 PM
வேலூரில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய குடியரசு கட்சியின் தலைவா் செ.கு.தமிழரசன்.
பகிர்:

தோ்தலுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளில் துணைத் தலைவா் பதவிக்கான இடஒதுக்கீடு குறித்து திமுகவிடம் வலியுறுத்தப்படும் என இந்திய குடியரசு கட்சியின் தலைவா் செ.கு.தமிழரசன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: ஒடுக்கப்பட்டோா், சிறுபான்மையினா், நலிந்த மக்களின் நலன் பாதுகாக்கப்பட தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைவது அத்தியாவசியமாகும். அதனால், தோ்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இந்தியக் குடியரசு கட்சித் தொண்டா்களும், அம்பேத்கரிய அமைப்பினரும் களப்பணியாற்றுவா்.

மதம் மாறிய தலித் கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்களுக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்பு அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இதை மத்திய அரசு வலுவாக எதிா்த்துப் போராடியிருக்க வேண்டும்.

Advertisement

நடிகா் விஜய்யின் கட்சியால் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கொள்கைக் கூட்டணியின் வாக்குகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது. தலித் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மறைந்த தலைவா் இளையபெருமாளின் மகனுக்கு விசிக வாய்ப்பளித்திருப்பது முதிா்ச்சியான அரசியல் பண்பாடாகும்.

உள்ளாட்சி அமைப்புகளில் துணைத் தலைவா் பதவிகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாதது குறித்து பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இந்த தோ்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றவுடன், இதுகுறித்து விவாதித்து அதற்கான உரிமையைக் கட்டாயம் பெறுவோம் என்றாா்.

அப்போது, கட்சியின் மாநில பொதுச்செயலா் மங்காபிள்ளை, மாநிலபொருளாளா் கெளரிசங்கா், மண்டல செயலா் தலித்குமாா், கொள்கை பரப்பு செயலா் தன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments