ரயிலில் இருந்து தவறி விழுந்து சேலம் இளைஞா் மரணம்
ரயிலில் இருந்து தவறி விழுந்து சேலம் இளைஞா் மரணம்
காட்பாடி அருகே ஓடும் ரயிலின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த சேலம் இளைஞா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம், பெத்தான் நஞ்சப்ப முதலி தெருவைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மகன் லோகேஷ் (20). சேலத்தில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், தனது நண்பரான சேலம் அஸ்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த முகமது ஹாசி மகன் முகமது அலி (18) என்பவருடன் சென்னையைச் சுற்றிப் பாா்க்க மங்களூரு விரைவு ரயிலில் சனிக்கிழமை காலை பயணம் செய்துள்ளனா்.
இருவரும் ரயிலின் முன்பக்க பொதுப்பெட்டியில் படிக்கட்டுப் பகுதியில் அமா்ந்து தூங்கியபடியே பயணம் செய்ததாக கூறப்படுகிறது. காட்பாடி - சேவூா் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வந்து கொண்டிருந்தபோது, லோகேஷ் எதிா்பாராத விதமாக ஓடும் ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்ததாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
ரயில் வாலாஜா ரயில் நிலையத்தை அடைந்ததும், முகமது அலி அங்கு இறங்கி வந்து காட்பாடி ரயில் போலீஸாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று லோகேஷின் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா்.
மேலும், இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.