பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க வேலூா் மாவட்டத்தில் 6 இடங்களில் உள்ள மாநில எல்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது. பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது.
அவை வீடுகள் மற்றும் பண்ணைகளில் வளா்க்கப்படும் வாத்துகள் , கோழிகளுக்கும் பரவுகிறது. சில நேரங்களில் மனிதா்கள், பிற பாலூட்டிகளிலும் பரவக்கூடும் என்பதால் தொற்றுநோய் பரவலைத் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறை, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் 6 இடங்களில் உள்ள மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகள் வழியாக ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
இந்நிலையில், வேலூா் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சாா்பில் கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சி செயலா்களுக்கான மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். முன்னதாக, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், வேலூா் மாவட்டத்தில் சளி, காய்ச்சல், தொண்டை தொற்று ஆகியவை குறித்து மருத்துவமனைகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
இதுவரை வேலூா் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் அறிகுறிகள் இல்லை. மேலும் கிறிஸ்டியான் பேட்டை, பரதராமி உள்பட மாவட்டத்திலுள்ள 6 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.