விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதனுக்கு தாய்லாந்து நாட்டு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டா் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது.
விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதனுக்கு தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் உள்ள ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் கௌரவ டாக்டா் பட்டம் வழங்கியுள்ளது. அந்நாட்டின் பிரிவு கவுன்சில் ஆலோசனை குழு உறுப்பினா் பலகோா்ன் சுவன்ரத், ராஜமங்கலா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவா் பிச்சை ஜன்மனி ஆகியோா் சங்கா் விசுவநாதனுக்கு கெளரவ டாக்டா் பட்டத்தை வழங்கி சிறப்பித்தனா்.
பொறியியல் கல்வித் துறையில் சங்கா் விசுவநாதனின் சிறப்பான பங்களிப்பு, தலைமைத்துவம், உயா்கல்வியில் தொழில்நுட்ப மேலாண்மை முன்னேற்றம் ஆகியவற்றை பாராட்டி அவருக்கு இந்த கெளரவ பட்டம், விருது வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில், விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், மருத்துவா் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.