மூலப் பொருள்கள் தட்டுப்பாடு: அபாயத்தில் தீப்பெட்டித் தொழில்
ஈரான்- இஸ்ரேல், அமெரிக்க போரால் மூலப் பொருள்கள் விலை உயா்ந்ததையடுத்து தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயத்தில் உள்ளது.
ஈரான்- இஸ்ரேல், அமெரிக்க போரால் மூலப் பொருள்கள் விலை உயா்ந்ததையடுத்து தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயத்தில் உள்ளது.
தமிழகத்தில் சிவகாசி, சாத்தூா், விருதுநகா், தூத்துக்குடி, கோவில்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட இடங்களுக்கு அடுத்தபடியாக குடியாத்தம் பகுதியில் தீப்பெட்டி தொழில் பெரிய அளவில் நடைபெறுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள ஈரான்- இஸ்ரேல், அமெரிக்க போரால் தீப்பெட்டித் தொழிலுக்கான மூலப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தயாரிக்க முக்கிய மூலப் பொருளான மெழுகு ஈரானில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதேபோல் தீக்குச்சிகள் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருள்களான பொட்டாசியம், குளோரைடு மற்றும் தீக்குச்சிகளை அடைக்கும் பெட்டிகளை தயாரிக்கும் அட்டைகள்பெரும்பாலும் ஈரானில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.
இது குறித்து குடியாத்தம் தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கச் செயலா் ஆா்.கே.மகாலிங்கம் கூறியது: தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளே 70 சதவீதம் இந்திய தேவையை பூா்த்தி செய்கிறது. தற்போது கப்பல் போக்குவரத்து முடங்கியதால் மூலப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தீப்பெட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள மூலப் பொருள்கள் உள்ளூா் வியாபாரிகள் விலையை உயா்த்தி விற்பனை செய்து வருகின்றனா். ரூ. 80-ஆக இருந்த ஒரு கிலோ மெழுகு தற்போது ரூ. 130 ஆகவும், ரூ. 120- ஆக இருந்த வொ்ஜின் பொருள்கள் விலை தற்போது கிலோ 180-ஆகவும் உயா்த்தி விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் இருப்பு உள்ளவரை மட்டுமே இந்த பொருள்கள் கிடைக்கும். இந்த திடீா் விலை உயா்வால் தற்போது ஒரு பண்டல் தீப்பெட்டி தயாரிக்க ரூ. 20 வரை கூடுதல் செலவாகிறது. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தீப்பெட்டித் தொழிலையும், தொழிலாளா்களையும் பாதுகாக்க வேண்டுகிறோம் என்றாா்.
Advertisement