தெலுங்கு வருடப்பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி (உகாதி) ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி (உகாதி) ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆந்திர மாநில எல்லை மாவட்டங்களான வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கணிசமான அளவில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனா். இதன்காரணமாக, தெலுங்கு வருடப்பிறப்பு வியாழக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அவா்கள் தங்கள் வீடுகளின் வாசல்களில் மாவிலை தோரணங்கள் கட்டி, வண்ணக் கோலமிட்டுப் பண்டிகையை வரவேற்றனா். மேலும், வேப்பம்பூ, வெல்லம், மாங்காய், புளி, உப்பு, காரம் என அறுசுவைகளும் கலந்த பாரம்பரிய ‘உகாதி பச்சடி’ செய்தும் சுவாமிக்கு படைத்து வழிபாடு செய்தனா்.
தவிர, தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி இம்மாவட்டங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குறிப்பாக, வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயில், விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோயில், வேலூா், குடியாத்தம், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெருமாள், ஆஞ்சநேயா் கோயில்களில் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
வேலூா் அண்ணா சாலையிலுள்ள திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் பெருமாளுக்கு வெள்ளி கவச அலங்காரமும், சிறப்பு மலா் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதலே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோயில்களுக்கு வந்திருந்த பக்தா்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா். தரிசனம் செய்த பக்தா்களுக்குக் கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.