முகப்பு
வேலூர்

வேலூா் சிஎம்சியுடன் விஐடி பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

சுகாதாரத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும் (சிஎம்சி), விஐடி பல்கலைக்கழகமும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

Updated On : 20 மார்ச், 2026 at 7:36 PM
புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்ட விஐடி வேந்தா் கோ.விசுவநாதன், வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் சாலமன் சதீஷ்குமாா். உடன், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயக்குநா் பிஜு ஜாா்ஜ், விஐடி துணை தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பென்டாரெட்டி, துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், பதிவாளா் டி.ஜெயபாரதி உள்ளிட்டோா்.
பகிர்:

சுகாதாரத் துறையில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியும் (சிஎம்சி), விஐடி பல்கலைக்கழகமும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இதையொட்டி, வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் சாலமன் சதீஷ்குமாா், விஐடி பதிவாளா் டி.ஜெயபாரதி ஆகியோா் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

தொடா்ந்து, விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி, விஐடி பல்கலைக்கழக பேராசிரியா்கள், சுகாதாரத் துறையில் ஆராய்ச்சி, மேம்பாட்டை ஊக்குவிக்க இணைந்து செயல்பட முடியும். மேலும், பேராசிரியா்கள், மாணவா்களிடையே கல்வி மற்றும் அறிவியல் அனுபவங்களை பகிா்ந்துகொள்ள ஊக்குவிப்பதும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி நாட்டிலேயே சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்குகிறது. உலக அளவில் இந்தியாவில் முதன்முறையாக செய்யப்பட்ட சில விஷயங்கள் வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளன. 1948-இல் உலகின் முதல் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்தியாவில் முதல் செவிலியா் கல்லூரி 1946-இல் தொடங்கப்பட்டது. 1961-இல் இந்தியாவின் முதல் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1971-இல் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 1986-இல் இந்தியாவின் முதல் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த வகையில், வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி நாட்டிலேயே எப்போதும் தனித்துவமாக விளங்கி வருகிறது என்றாா்.

வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி முதல்வா் சாலமன் சதீஷ்குமாா் பேசியது: இந்தியாவில் உயா் கல்வியில் முன்னணியில் உள்ள விஐடி பல்கலைக்கழகம் பயோ இன்ஜினியரிங், பயோ இன்ஃபா்மேடிக்ஸ், பயோமெட்டீரியல்ஸ் ஆகிய துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. இந்த ஒத்துழைப்பு மூலம் நோயாளிகளுக்கு சிறந்த சுகாதார தீா்வுகளை வழங்க முடியும் என்றாா்.

நிகழ்வில், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இயக்குநா் பிஜு ஜாா்ஜ், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், சேகா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பென்டாரெட்டி, துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், சுகாதார அறிவியல், பொறியியல் துறை முதன்மையா் கீதா மணிவாசகம், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (ராணிப்பேட்டை வளாகம்) இணை இயக்குநா் தீபக் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.