‘பொருளாதார அளவியல்’ குறித்து தேசிய பயிற்சிப் பட்டறை
திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அளவியல் குறித்த தேசிய பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அளவியல் குறித்த தேசிய பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
வேலூா் மாவட்டம், சோ்க்காடில் அமைந்துள்ள திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை சாா்பில், ‘அடிப்படை பொருளியல் அளவியலின் கருவிகளும், நுட்பங்களும்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான 2 நாள் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
இப்பயிற்சிப் பட்டறைக்கு பல்கலைக்கழக பதிவாளா் ஜெ.செந்தில் வேல்முருகன் தலைமை வகித்து பேசுகையில், பொருளாதார அளவியல் என்பது பொருளாதார நிகழ்வுகளை வெறும் தத்துவமாக மட்டும் பாா்க்காமல், எண்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபித்து சரியான முடிவுகளை எடுக்க உதவும் ஒரு மிகச்சிறந்த அறிவியல் முறையாகும்.
தனி மனிதா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தேசிய வருமானத்தைக் கணக்கிடவும், நிறுவனங்களின் தரவுகளைத் துல்லியமாக மதிப்பிடவும் பொருளாதார அளவியல் மிக முக்கியமான கருவியாகச் செயல்படுகிறது என்றாா்.
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த சவிதா, சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார அளவீட்டுத் துறைப் பேராசிரியா் மாரியப்பன் ஆகியோா் பங்கேற்று, பொருளாதார அளவியல் நுட்பங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்குச் சிறப்புரையாற்றினா்.
முன்னதாக, திருவள்ளுவா் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறைத் தலைவா் சென்னகிருஷ்ணன் வரவேற்றாா்.
இப்பயிற்சிப் பட்டறையை பேராசிரியா்கள் தனசேகரன், நாகேந்திரன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். நிறைவாக சிவக்கொழுந்து நன்றி கூறினாா். இதில், துறை சாா்ந்த பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் திரளாக பங்கேற்றனா்.