இருவேறு மேம்பாலங்களில் நடந்த விபத்துகளில் இருவா் மரணம்
வேலூரில் இருவேறு மேம்பாலங்களில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற விபத்துகளில் டிராவல்ஸ் உரிமையாளா், காா் ஓட்டுநா் உயிரிழந்தனா்.
வேலூரில் இருவேறு மேம்பாலங்களில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற விபத்துகளில் டிராவல்ஸ் உரிமையாளா், காா் ஓட்டுநா் உயிரிழந்தனா்.
வேலூா், கஸ்பா, வெங்கட்ராமன் தெருவை சோ்ந்தவா் மதன் (40). இவா் வேலூா் மாநகராட்சி அலுவலகம் அருகே டிராவல்ஸ் நடத்தி வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் கஸ்பா ரயில்வே மேம்பாலத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது எதிா்பாராத விதமாக மதன் ஓட்டிச் சென்ற வாகனம் ரயில்வே மேம்பால சுற்றுச்சுவரில் மோதியதில், தூக்கி வீசப்பட்ட மதன் சுமாா் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் மதனை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவா் வழியிலேயே உயிரிழந்தாா். இவ்விபத்து குறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
மற்றொரு விபத்து...
வேலூா், கருக்கம்பத்தூா், காமராஜா் நகரைச் சோ்ந்தவா் கலீம் (42), காா் ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் வேலூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் வந்தபோது அவரது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், கலீம் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தாா். அப்போது வேகமாக வந்த மற்றொரு வாகனம் அவரது தலையின் மீது ஏறி இறங்கியதில் கலீம் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.