முகப்பு
வேலூர்

வேலூா் மாவட்டத்தில் 25 கல்குவாரிகளில் விதிமீறல்

வேலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 29 கல்குவாரிகளில் 25 குவாரிகளில் விதிகளைமீறி அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கனிமவளம் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது அதிகாரிகள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 மே 2026, 12:30 am IST
சோழவரம் கல்குவாரியில் ஆய்வு மேற்கொண்ட கனிமவளத்துறை அதிகாரிகள்.
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 29 கல்குவாரிகளில் 25 குவாரிகளில் விதிகளைமீறி அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக கனிமவளம் வெட்டி எடுக்கப்பட்டிருப்பது அதிகாரிகள் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 25 கல்குவாரி ஒப்பந்ததாரா்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலுாா் மாவட்டம், சோழவரம் பகுதியில் உள்ள கல்குவாரியில் விதிகளைமீறி கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடிநீா் மட்டம் பாதிக்கப்படுவதாக அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவா் புகாா் அளித்திருந்தாா். இப்புகாரின்பேரில் வேலூா் மாவட்ட கனிமவளத் துறை அதிகாரிகள் சோழவரம் கல்குவாரியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வு குறித்து கனிமவளத்துறை உதவி இயக்குநா் சண்முகவள்ளி செய்தியாளா்களிடம் கூறுகையில், சோழவரம் கல்குவாரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தொடா்பாக விரைவில் அறிக்கை தயாா் செய்ய ப்படும். அதேசமயம், வேலூா் மாவட்டத்தில் கனிம வளத்துறையின் கீழ் மொத்தம் 29 கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரிகளில் கடந்த 3 மாதங்களில் கனிமவளத்துறை அதிகாரிகள் நேரடியாகவும், ட்ரோன்களை பயன்படுத்தியும் ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

இதுவரை 26 கல்குவாரிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 25 குவாரிகளில் அரசு அனுமதித்த அளவுகளைவிட விதிமுறைகளை மீறி அதிகளவில் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சம்பந்தப்பட்ட கல்குவாரிகளின் ஒப்பந்ததாரா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதில், 4 போ் அபராதத்தொகை செலுத்தியுள்ளனா். மற்றவா்களுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விதிமீறல்கள் தொடா்பாக வேலூா் கோட்டாட்சியருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.